Wednesday, February 1, 2023

வேண்டிக்கொள்கிற உங்களுக்கு நன்மையானவைகளையே கர்த்தர் தருவார்.!

பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
மத்தேயு - 7:11 

            தம்முடைய பிள்ளைகள் தம்மிடத்திலே வேண்டிக் கொள்கிற காரியங்களில் கர்த்தர் மிகவும் கரிசனை உள்ளவராக இருந்து நன்மையான ஈவுகளை ஏற்ற வேளையிலே கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். நீங்கள் வெகு காலமாக ஏதோ சில காரியங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கலாம், இவ்வளவு நாட்களாக நான் ஜெபித்தும் அந்த காரியத்தில் ஒரு மாற்றம் ஏற்பட வில்லையே, வெற்றியை நான் கைப்பற்றிக் கொள்ள முடியவில்லையே என்று நீங்கள் சிந்தித்து கொண்டு இருக்கலாம்.

            ஒரு நான்கு வயது குழந்தை, தகப்பனே உம்முடைய வாகனத்தை எனக்கு கொடும் நான் ஓட்டி பார்த்துவிட்டு தருகிறேன் என்று சொல்லி கேட்டால் எந்த ஒரு பாசமுள்ள தகப்பனும் அதை அனுமதிப்பதே இல்லை. இது என்னுடைய பிள்ளைக்கு நன்மையை தருமா என்று சிந்தித்து சிலவற்றை அவர் மறுக்கக் கூடியவராக இருக்கிறார். தகுதியான காரியங்களை ஏற்ற வேளையிலே அவர் கொடுப்பார் தீங்கான காரியங்களை எந்த தகப்பனும் மகன் கேட்கிறானே என்பதற்காக அந்த மகனுடைய வாழ்க்கையிலே அனுமதித்து விடுவதில்லை. தன் மகனுடைய எதிர்காலத்தைபற்றி  மகனை விட அதிகமாக தகப்பன் கவலைப்படுகிறவராக இருக்கிறார். 

            கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு எப்பொழுதுமே நல்ல ஈவுகளையே கொடுக்கிறவர். அனேக பக்தர்களுடைய வாழ்க்கையை நாம் பார்க்கும் போது, தேவன் அவர்களோடு இருந்தபோதிலும் அவர்களுடைய வாழ்க்கையில் சில நெருக்கடியான காலகட்டங்களை அவர்கள் கடந்து வந்ததை நாம் பார்க்க முடியும். அந்த நேரங்களில் தேவன் அவர்களோடு இருந்த போதிலும் அவர்களுடைய ஜெபத்திற்கு பதில் இல்லாமல் இருப்பதைப் போன்ற தோற்றம் காணப்பட்டிருக்கிறது. 

யோசேப்புடைய பல வர்ண அங்கியை சகோதரர்கள்  பறித்துக் கொண்டார்கள்: அங்கி திருப்பி கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்து இருப்பார். 

யோசேப்பை தண்ணீரற்ற கிணற்றிலே தூக்கி போட்டார்கள்:அங்கி போனாலும் பரவாயில்லை கிணற்றிலிருந்து தப்பி விட மாட்டோமா என்று எண்ணியிருப்பார்.

அவர் அடிமையாக விற்கப்பட்டார்: எப்படியாவது இந்த சூழ்நிலையில் இருந்து நான் தப்பி என்னுடைய தகப்பன் வீட்டை அடைந்தால் நன்றாக இருக்குமே என்று அவர் கலங்கியிருப்பார்.

யோசேப்பு அடிமையாக எகிப்திலே வாழ்ந்தார்: அந்த சூழ்நிலையில்  என்றாவது ஒருநாள் எனக்கு பலவர்ணஅங்கி தைத்துதந்த அந்த பாசமான தகப்பனுடைய முகத்தை பார்க்க முடியுமா என்று ஏங்கி இருப்பார்.

            அவர் கடந்து வந்த மேற்குறிப்பிட்ட எல்லா சூழ்நிலைகளிலும் அவர்  ஆண்டவரை நோக்கி கூப்பிட்டிருப்பார். அவர் விரும்பிய முடிவுகளை அடைவதற்காக அவர் ஜெபித்து இருப்பார். தேவன் அவரோடு இருக்கக்கூடியவராக இருந்தும், கர்த்தரிடமிருந்து உயர்ந்த சொப்பனங்களை பெற்றுக் கொள்ளக் கூடியவராக இருந்தபோதிலும் கூட அவருடைய ஜெபம் கேட்கப்படாததைப்போலக் காணப்படுகிறது.  கேட்கப்படாத ஜெபங்கள் அவரை எகிப்து சாம்ராஜ்யத்தின் சிங்காசனத்திற்கு முன்பாக நிறுத்த கூடியதாக முழு எகிப்துக்கும் அதிகாரியாக்கக் கூடியதாக மாறியது. 

            ஏதோ சில காரியங்களுக்காக வெகு நாட்களாக நீங்கள் ஜெபித்திருக்கலாம், ஜெபித்த காரியங்கள் உங்களுடைய கண்களுக்கு முன்பதாகவே தோல்விகளாக முடிந்திருக்கலாம். நான் வெகுவாக ஜெபித்தும் அந்த காரியம் நடக்கவில்லையே, நான் வெகுவாக ஆண்டவரை நோக்கி கூப்பிட்டும் கர்த்தர் கொடுக்கவில்லையே என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா.?  ஒரு தகப்பனுக்கு தன்னுடைய பிள்ளையை குறித்து ஒரு எதிர்கால திட்டம் உண்டு. நீங்கள் இன்று இருக்கக்கூடிய சூழ்நிலைகளை உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும்கூட கர்த்தர் உங்களுக்கு தரப்போகும் நல்ல ஈவுகளைப் பார்த்து நீங்கள் ஆண்டவரை மகிமைப்படுத்த கூடியதான சூழ்நிலை உங்களுடைய வாழ்க்கையிலே நிச்சயமாக உருவாகும். ஆகவே எந்த சூழ்நிலையிலும் சோர்ந்து போகாதீர்கள். தேவன் பெரிய காரியங்களை செய்வார்.

No comments:

Post a Comment

உங்களுக்கு எதிரானவர்கள் சத்தியத்துக்கு எதிரானவர்கள்.!

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்...