Friday, February 3, 2023

துன்பமான சூழ்நிலைகளிலும் கர்த்தரை தேடுங்கள்.! கனமடைவீர்கள்.

கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன்; 
அவர் துதி எப்போதும் என் வாயில் இருக்கும்.
சங்கீதம் 34:1

            கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன் என்ற வார்த்தை மிகவும் ஆழமான அர்த்தங்களை உடையது. சமாதானமான, சந்தோஷமான ஒரு வாழ்க்கை வாழும் போது ஆண்டவரைத் துதிப்பது மிகவும் எளிய ஒரு காரியம், ஆனால் நம்முடைய துன்பமான நேரங்கள்; நம்முடைய வாழ்க்கையில் நாம் கடந்து வந்த கசப்பான நினைவுகள்; துக்கங்களை சுமந்து கொண்டு ஆண்டவரைத் துதிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு காரியம். ஒரு கசப்பான பொருளை நாம் தவறுதலாக நம்முடைய வாயிலை போட்டுக் கொண்டால் சற்று நேரத்துக்குத் தான் அது அந்த கசப்பு சுவையை தரும். வாழ்க்கை தரக்கூடிய வலிகள், இழப்புகள், அடைந்த நம்பிக்கை துரோகங்கள் மூலமாக இருதயத்திலே பதிந்து போன கசப்பான நினைவுகள் நம்மை மிகவும் சோர்வடையச் செய்வதாக காணப்படும்.

            லூக்கா 2: 37-ல் அன்னாள் என்பதான தீர்க்கதரிசியை பார்க்க முடியும் ஏறக்குறைய 84 வயது உள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல் இரவும் பகலும் ஜெபம் பண்ணி ஆராதனை செய்து கொண்டு இருந்தாள். அந்த விதவையின் வாழ்க்கையை நாம் பார்க்கும் போது ஆண்டவரை ஆராதிக்கத்தக்க மகிழ்ச்சியான ஒரு சூழ்நிலைகளையும் நாம் அங்கு பார்க்க முடியாது. வயது முதிர்ந்த  ஸ்திரி, இளம் வயதிலேயே விதவையானவள் இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடைப்பட்ட நெடிய வாழ்க்கை எவ்வளவு துன்பங்களை கொண்டு வந்திருக்கலாம் என்பதை உங்களுடைய சிந்தனைக்கே விட்டு விடுகிறேன். தன்னுடைய வாழ்க்கை தனக்கு கொடுத்த கசப்புகளுக்கு அப்பால் அவள் கர்த்தரை நேசிக்க கூடியவளாக, இரவும் பகலும் அவரை ஆராதிக்க கூடியவளாக, ஸ்தோத்தரிக்க கூடியவளாக காணப்பட்டார்.அவளுக்கு இயேசு கிறிஸ்து தம்மை வெளிப்படுத்தினார். சர்வலோகத்தையும் படைத்த ஆண்டவர் ஒரு ஏழை விதவையின் கையிலே இருந்து புன்முறுவலோடு அவருடைய முகத்தை பார்க்க கூடிய அந்த காட்சியை நீங்கள் மன கண்களிலே சிந்தித்துப் பாருங்கள்.

             உலகத்தின் கடைசி நாளிலே நீதியுள்ள நியாயாதிபதியாக எழுந்தருளும் போது அநேக மனிதர்கள் ஆண்டவரிடத்தில் வந்து உம்மோடு கூட போஜன பானம் பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம் பண்ணினீரே; உமது நாமத்தினாலே பிசாசுகளை துரத்தினோம் அல்லவா? வியாதியஸ்தர்களை சொஸ்தம் ஆக்கினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அனேக அற்புதங்களை செய்தோம் அல்லவா? என்றெல்லாம் சொல்லி இரக்கத்திற்காக கெஞ்சியும் பரலோகத்தை சுதந்தரித்துக் கொள்ள முடியாத போது, உலகப்பிரகாரமாக எந்த நன்மையும் காணாத துரதிஷ்டம் நிறைந்த  பெண் என்று மனிதர்களால் பார்க்கப்படத்தக்க வாழ்க்கை வாழ்ந்த இந்த ஏழை விதவை ஒரு சிறிய புன்முறுவலோடு ஆண்டவருடைய சமூகத்திலே ஆண்டவரை மகிமைப்படுத்தும் போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.

            அநேக ராஜாக்கள் உலகத்தையே அடக்கி ஆண்ட சக்கரவர்த்திகள் இன்னும் பெரிய பெரிய மனிதர்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு பாக்கியத்தை நாம் பெற்றுக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு நம்முடைய கண்களுக்கு முன்பே இருக்கிறது. மரித்த மனிதர்கள் இனி ஒருபோதும் மனம் திரும்பி ஆண்டவரை அறிந்து கொள்ள, இரட்சிக்கப்பட முடியாது. ஆனால் அதற்கான வாசல் நம்முடைய வாழ்க்கையில் திறந்தே இருக்கிறது. ஆகவே வாழ்க்கையில் இருக்கக்கூடிய துக்கம் கசப்புகளை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு இந்த அனுகூலமான சூழ்நிலையை பயன்படுத்தி நாம் ஆண்டவரை ஸ்தோத்தரிக்க, துதிக்க, ஆராதிக்க தொடங்குவோம். கர்த்தர் நம்மை பாக்கியவான்களாக மாற்றுவார்.

No comments:

Post a Comment

உங்களுக்கு எதிரானவர்கள் சத்தியத்துக்கு எதிரானவர்கள்.!

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்...