Saturday, February 4, 2023

கர்த்தர் உடைந்த உள்ளங்களைத் தேற்றுகிறார்.!

இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்,
 அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
சங்கீதம் 147:3

             நம்முடைய கர்த்தர், தம்முடைய படைப்புகளும், கையின் கிரியைகளுமாகிய நம்மை கண்ணோக்கி பார்க்கிறவர், நம்முடைய கண்ணீரை காண்கிறவர், உள்ளத்தின் வேதனைகளை அறிந்திருக்கிறவர். எந்தவிதமான காரியமும் கர்த்தருடைய பார்வைக்கு மறைவானது அல்ல. நம்முடைய அனேக துக்கங்களை நாம் மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்துக் கொள்ளலாம், ரகசியமாக கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கலாம், ஆனால் அவையெல்லாம் கர்த்தருடைய கண்களுக்கு முன்பதாக வெளியரங்கமாக இருக்கிறது. அவர் இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிற தேவன். அவர் உடைந்த உள்ளங்களை தேற்றுகிறவர். நம்முடைய காயங்களை கட்டுகிறவர்.நாம் ஆராதிக்கிற தேவன் எவ்வளவு நல்ல தேவன். 

            யோசேப்பு எகிப்துக்கு கொண்டு போகப்பட்டார். மிகவும் துக்கமான சூழ்நிலை. அவன் நேசிக்க கூடிய சொந்த சகோதரர்களே அவருக்கு எதிராக செய்த சதி, துரோகம், கொலை முயற்சி இப்படி பலவிதமான காரியங்களினால் வந்த மனவேதனை, செய்யாத தவறுக்காக அவர் சிறைச்சாலையில் போடப்பட்டார். மற்றொரு மனிதனுடைய முகத்தில் விழிக்க முடியாத அளவுக்கு மிகுந்த நிந்தையை கொண்டு வரக்கூடிய குற்றச்சாட்டு அது.ஆனால் கர்த்தர் யோசேப்போடு இருந்தார். சூழ்நிலைகள் அப்படியே சென்றுகொண்டிருக்கவில்லை. வெகு விரைவிலே எகிப்தின் ராஜாவுக்கு முன்பதாக நிற்கக் கூடியவராக, முழு எகிப்து தேசத்துக்குமே அதிகாரியாக மாற்றப்பட்டார். 

            அடிமையாக ஆதரவற்றவராக எகிப்துக்கு வந்த அவருக்கு எகிப்து தேசத்தின் ராஜாவே முன் நின்று திருமணம் செய்து வைத்தார். என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் யாவையும் நான் மறக்கும் படி தேவன் பண்ணினார் என்று சொல்லி மூத்த குமாரனுக்கு மனசே என்று பெயரிட்டார். நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்திலே என்னை பலுகப்பண்ணினார் என்று சொல்லி இளையவனுக்கு எப்ராயீம் என்று பெயரிட்டார். கர்த்தர் யோசேப்பை மகிழ்ச்சியினாலே நிரம்பினவராகவே மாற்றிவிட்டார்.

            நீங்கள் எப்படிப்பட்ட காரியங்களின் வழியாக கடந்து சென்றாலும் அது ஒரு முடிவு அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கர்த்தர் நியமித்த ஓட்டம் வரை நாம் ஓடிக்கொண்டே இருக்கப் போகிறோம். யோசேப்பை போல கடந்த நாட்களிலே உங்கள் வாழ்க்கையில் வந்த கசப்பான நினைவுகளை பார்த்து, துரோகங்களை பார்த்து, அநீதிகளை பார்த்து, நொறுங்குண்ட இருதயத்தோடு காணப்பட்டுக் கொண்டிருக்கலாம். எந்த காயமாக இருந்தாலும் எப்படிப்பட்ட வேதனையாக இருந்தாலும் கர்த்தர் உங்கள் காயங்களை கட்டுகிறவராக, அவர் உங்களை குணமாக்குகிறவராக இருக்கிறார். யோசேப்பின் வாழ்க்கையில் எல்லா துக்கங்களையும் மறக்க பண்ணின தேவன் உங்கள் வாழ்க்கையிலும் காணப்படக்கூடிய எல்லா துக்கங்களையும் நீக்கி போடுவார். அவர் உங்களை மகிழ்ச்சியினாலே நிரப்புவார். ஆகவே ஆண்டவரை மட்டுமே நோக்கிப் பாருங்கள் அவர் உங்களுக்காக அற்புதங்களை செய்வார்.

No comments:

Post a Comment

உங்களுக்கு எதிரானவர்கள் சத்தியத்துக்கு எதிரானவர்கள்.!

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்...