Wednesday, February 15, 2023

கர்த்தர் உங்களுக்காக பாதைகளை செவ்வையாக்குவார்.!

நான் உனக்கு முன்னே போய் கோணலானவைகளை செவ்வையாக்குவேன்.
ஏசாயா 45:2 

            கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு பாதை காட்டுகிறவராக மட்டுமல்லாமல் அவர்களுக்கு முன்னே செல்லுகிறவராக பாதைகளை உருவாக்குபவராக சீர்படுத்துகிறவராக காணப்படுகிறார். ஆகவே நீங்கள் செல்லக்கூடிய பாதைகளிலே எத்தகைய தடைகள் எதிர்ப்புகள் போராட்டங்கள் வந்தாலும் தைரியமாக கர்த்தருடைய முகத்தை நோக்கிப் பாருங்கள் அவர் உங்களை விடுவித்து ரட்சித்து வழிநடத்த வல்லவராக தான் நிச்சயதார்த்திருக்கக்கூடிய உயர்வுகளில் கொண்டு சேர்க்கக் கூடியவராக இருக்கிறார்.

            இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய வார்த்தையின் படியே எகிப்திலிருந்து கானானை நோக்கி புறப்பட்டார்கள். அவர்களது பாதையிலே செங்கடல் குறுக்கிட்டது. செங்கடலை விட பிரச்சனைக்குரிய விஷயமாக பார்வோனும் சேனையும் அவர்களை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. முன்னே செங்கடல் பின்னே பார்வோனும் சேனைகளும்.! ஜனங்கள் மிகவும் கலங்கி போனார்கள். ஒரு கட்டத்திலே மோசேக்கு எதிராக முறுமுறுக்க துவங்கினார்கள். இஸ்ரேலர்கள் எகிப்தை விட்டு புறப்படுவதற்கு முன் கர்த்தர் எகிப்தில் பலவிதமான அற்புதங்களை இஸ்ரவேல் ஜனங்களின் கண்களுக்கு முன்பதாக செய்தார். எகிப்தியரையும் பார்வோனையும் 10 விதமான வாதைகளால் வாதித்தார். அவர்கள் இப்போது சந்தித்து இருக்கக்கூடிய இக்கட்டான சூழ்நிலை முன்காலங்களிலே தேவன் அவர்களுக்கு கொடுத்த நன்மைகளை, வெற்றிகளை மறக்கப்பண்ணக் கூடியதாக மாறிப்போனது. எத்தகைய சூழ்நிலைகள் நம்முடைய வாழ்க்கையிலே வந்தாலும் நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். அவர் நிச்சயமாகவே தன்னுடைய வார்த்தைகளை நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார். 

            பாதையிலே எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் எவ்வளவு போராட்டங்கள் வந்தாலும் எல்லாவற்றுக்கும் மேலே கர்த்தர் சர்வ வல்லமை உடையவராக இருக்கிறார். அவரால் செய்யக்கூடாத எந்த ஒரு அதிசயமான காரியமும் இல்லை. 

            பின்தொடர்ந்து வரக்கூடிய பார்வோனும் சேனையும் யுத்தங்களில் பழக்கப்பட்டவர்கள். ஆனால் செங்கடலின் கரையில் நின்று அங்கலாத்துக் கொண்டிருக்கக்கூடிய இஸ்ரவேலர்கள் 400 ஆண்டுகளாக அடிமைகளாக மட்டுமே இருந்தவர்கள் அவர்களுக்கு ஆயுதங்களை பயன்படுத்தத் தெரியாது ஆயுதங்களும் கிடையாது அப்படியே இருந்தாலும் வலிமை மிகுந்த எகிப்து ராணுவத்தை அவர்களால் என்ன செய்ய முடியும்? எந்த திசையிலும் நோக்கி பார்க்க முடியாத மிகுந்த இக்கட்டுக்குள்ளே அந்த ஜனங்கள் அகப்பட்டிருந்தார்கள்.   அருமையானவர்களே எப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்குள்ளே அகப்பட்டிருந்தாலும் எல்லா பாதைகளும் அடைந்தது போல காணப்பட்டாலும் எல்லா நாளும் எந்நேரமும்  நாம் நோக்கி பார்க்கத் தக்க வாசலாக தேவனுடைய சிங்காசனம் காணப்படுகிறது. கர்த்தரை நோக்கி பாருங்கள் அவர் உங்களுக்கு வழிகளை திறப்பார். பாதைகளை செவ்வை படுத்துவார். 

            இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பதாக நின்ற செங்கடல் இரண்டாக பிளந்து போனது. இஸ்ரவேல் ஜனங்கள் அதன் நடுவே நடந்து மறு கரையை அடைந்தார்கள். அதே சமுத்திரம் பார்வோனையும் சேனைகளையும்  மூழ்கடிக்க கூடியதாக மாறியது. கர்த்தரை ஆராதிக்ககூடிய கர்த்தருடைய வார்த்தைக்கு பயப்படக்கூடிய நீங்கள் எந்த சூழ்நிலையிலும் தனிமையானவர்கள் அல்ல. கர்த்தர் உங்களோடிருந்து உங்களை வழிநடத்தக் கூடியவர். உங்களுக்கு முன் சென்று கோணலானவைகளை செவ்வாயாக்குவார். எல்லா வாசல்களும் அடைந்து விட்டது என்று அங்கலாய்த்து கொண்டிருந்தாலும் கூட அவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களை செய்து உங்களை வழிநடத்த வல்லவராக இருக்கிறார்.

No comments:

Post a Comment

உங்களுக்கு எதிரானவர்கள் சத்தியத்துக்கு எதிரானவர்கள்.!

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்...