Friday, January 20, 2023

தாழ்மை உள்ளவர்களாக இருங்கள் உயர்வுகளை பெற்றுக் கொள்வீர்கள்

மனிதர்கள் பலர் உயர்வுகளை, வெற்றிகளைப் பெற்று மற்ற அனேகரை விட தலை சிறந்தவர்களாக விளங்கும்போது அவர்கள் மனங்களிலே பெருமை எட்டிப் பார்ப்பது இயல்பு. நேபுகாத்நேசர் என்று ஒரு ராஜா இருந்தார். அவர் பல நாடுகளை வென்று தனது பாபிலோன் தேசத்தை அன்றைய காலகட்டத்தில் ஒரு வல்லரசு நாடாக மாற்றி இருந்தார். அவர் தனது அரண்மனையின் மேல் உலாவிக் கொண்டிருக்கும்போது, இது என் வல்லமையின் பராகிரமத்தினால் என் மகிமை பிரதாபத்திற்கென்று நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா? என்றார். இந்த வார்த்தையை அவர் சொல்லி முடிப்பதற்கு முன்பாக அவர் மீது கர்த்தருடைய தண்டனை வந்தது. மிருகங்களைப் போல புல்லை மேய்கிறவராக மாறினார். 

பெருமைக்கு எதிர்ச்சொல் தாழ்மை. தாழ்மை உள்ளவர்களுக்கு கர்த்தர் கிருபை அளிக்கிறார். பெருமையை குறித்து தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக இருக்க கடமைப்பட்டிருக்கிறோம். பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. கர்த்தர் ஒருவருக்கு சத்துருவாக இருப்பாரானால் அவருக்கு யார் உதவி செய்ய முடியும்? யார் அவருக்கு துணை நிற்க முடியும்?அவர்களுடைய நிலைமை மிகவும் பரிதாபகரமாக மாறிவிடும்.

 நல்ல வீடு, கல்வி, செல்வம், செல்வாக்கு, அன்பான மனைவி அறிவில் சிறந்த பிள்ளைகள், நல்ல குடும்பத்தார், நல்ல நண்பர்கள், நல்ல உடல்நலம் என எல்லாவற்றிலும் அல்லது அவற்றில் சிலவற்றில் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம். அவற்றையெல்லாம் பார்க்கும் போது என்னுடைய திறமை, என்னுடைய அறிவு, என்னுடைய அதிர்ஷ்டம் என்றெல்லாம் மனதில் கூட நினைத்து விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். அனைவருக்கும் இல்லாத சிலவற்றை உங்களுடைய கரங்களிலே ஆண்டவர் தந்திருப்பாரே ஆனால் அவருக்கு நீங்கள் எந்த அளவுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்? 

உபாகமம் 8: 17 வது வசனம் என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்கு சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளாமல் இருக்க எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்கிறது. உபாகமம்-8:18 கர்த்தர் தான் ஐசுவரியத்தை சம்பாதிக்க கூடிய பெலனை உனக்கு கொடுக்கிறவர் என்று கூறுகிறது. நம் வாழ்க்கையில் சிறப்பான காரியங்களை பார்க்கும்போது தலைகளை தாழ்த்தி நன்றியுள்ள இருதயத்தோடு அவருக்கு நன்றி செலுத்துங்கள். உங்களை அவருடைய சமூகத்தில் தாழ்மைப்படுத்துங்கள். நீங்கள் உயர்த்தப்படுவீர்கள்.

 நீதிமொழிகள்-22:4  தாழ்மைக்கும் கர்த்தருக்கு பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம். 

என்று சொல்லுகிறது.
 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

No comments:

Post a Comment

உங்களுக்கு எதிரானவர்கள் சத்தியத்துக்கு எதிரானவர்கள்.!

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்...