Monday, February 6, 2023

உங்கள் கண்ணீரின் ஜெபத்துக்கு நிச்சயமான, பிரமிக்கத்தக்க பதில் உண்டு. !

உன் விண்ணப்பத்தை கேட்டேன், கண்ணீரைக் கண்டேன்; 
இதோ நான் உன்னை குணமாக்குவேன்.
2 ராஜாக்கள் 20:5 

            எசேக்கியா ராஜா வியாதிப்பட்டு மரணப்படுக்கையில் இருக்கக்கூடிய நேரத்திலே ஏசாயா தீர்க்கத்தரிசி அவரிடத்தில் வந்து, உம்முடைய வீட்டுக் காரியத்தை ஒழுங்கு படுத்தும் நீர் பிழைக்க மாட்டீர், மரித்துப் போவீர் என்றார். சர்வ லோகத்தையும் ஆளக்கூடிய சர்வ வல்லமையுள்ள தேவன் தன்னுடைய தீர்க்கதரிசியை அனுப்பி எசேக்கியா ராஜாவிடத்தில்  நீர் மரித்துப் போவீர் என்று சொல்லுவதை இங்கே நாம் காண முடியும். அதைக் கேட்ட உடனே எசக்கியா ராஜா தன் முகத்தை சுவருக்கு நேராக திருப்பி கண்ணீரோடு கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினார்.

         சாதாரண மனிதர்களே தங்கள் ஒருமுறை சொன்ன காரியத்தை மாற்றி சொல்வதற்கு யோசிப்பார்கள்.  வேதத்திலே பிலாத்து என்ற மனிதரை நாம் பார்க்க முடியும். சிலுவையில் அறையப்படும் படி இயேசு கிறிஸ்துவின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்ன என்பதை ஜனங்கள் அறிந்து கொள்ளும்படியாக நான்கு மொழிகளில் "நசரேனாகிய இயேசு யூதருடைய ராஜா" என்ற மேல் விலாசத்தை எழுதி சிலுவைக்கு மேலாக பிலாத்து வைத்தார். இதைக் கண்ட யூத பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிலாத்துவிடம் சென்று  இவர் யூதருடைய ராஜா என்று தன்னை சொல்லிக் கொண்டார் என்பதாக எழுதும் என்று கேட்டுக் கொண்டார்கள்.  பிலாத்து அமைதியாக  நான் எழுதினது எழுதினதே என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டார்.  மிகப்பெரிய ரோம பேரரசின் மிகச்சிறிய யூதேயா பகுதியின் ஒரு ஆளுநர் தன்னுடைய வார்த்தையை மாற்றுவதற்கு மறுத்துவிட்டார். 

            கர்த்தருடைய வார்த்தையை கொண்டு வந்த அந்த ஏசாயா தீர்க்கதரிசி ராஜாவின் வீட்டு முற்றத்தை தாண்டுவதற்கு முன்பதாக மீண்டும் கர்த்தர் தீர்க்கதரிசியை கூப்பிட்டு, உன் விண்ணப்பத்தை கேட்டேன் உன் கண்ணீரை கண்டேன் உன்  நாட்களோடு பதினைந்து வருடத்தை கூட்டுவேன் என்றார். அப்படியே எசேக்கியா ராஜா பிழைத்துக் கொண்டார். சர்வ வல்லமை உள்ள தேவனாக இருந்தபோதிலும் தன்னுடைய எளிய பக்தன் மனமுருகி கூப்பிட்ட போது ஆண்டவர் மனமிரங்க்கூடியவராக காணப்படுகிறார்.

             உங்களுடைய வாழ்க்கையிலும் கூட ஏதோ சில காரியங்களைக் குறித்து நீங்கள் நம்பிக்கை இழந்தவர்களாக காணப்படலாம். உங்கள் சூழ்நிலைகளின் அடிப்படையில் சிலவற்றை அல்லது யாரோ சிலர் சொன்ன வார்த்தைகளை நீங்கள் நம்பிக் கொண்டு இருக்கலாம், எவ்வளவு பெரிய மனிதர் உங்களை உடைக்கக்கூடிய; உங்கள் நம்பிக்கை அடியோடு அற்றுப்போகத்தக்க வார்த்தையை உங்களிடத்தில் சொன்னாலும் நீங்கள் நோக்கி பார்ப்பதற்கான ஒரு இடம் உண்டு. அது கர்த்தருடைய சமூகம், கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள் அவர் மனமிரங்கக் கூடியவராக காணப்படுகிறார். யார் இல்லை என்று சொன்னாலும் கர்த்தர் ஆம் என்று சொல்லும் வல்லமை படைத்தவர். பக்தனுடைய வேண்டுகோளுக்காக தன் முடிவையே மாற்றின தேவன் உங்கள் ஜெபத்திற்கு பதில் தராமல் இருப்பாரா? நிச்சயமாய் பதில் தருவார். உங்கள் வாழ்க்கையில் கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.

No comments:

Post a Comment

உங்களுக்கு எதிரானவர்கள் சத்தியத்துக்கு எதிரானவர்கள்.!

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்...