Friday, February 10, 2023

மனத் தாழ்மையுள்ளவர்கள் கர்த்தரால் உயர்த்தப்படுவார்கள்.!


மனுஷனுடைய அகந்தை அவனை தாழ்த்தும்
 மனத் தாழ்மை உள்ளவனோ கனமடைவான்.
 நீதிமொழிகள் 29:23 

            வேதம் மனத்தாழ்மையைக் குறித்து அதிகமாக போதிக்கிறது. தம்மை பின்பற்றக்கூடிய ஜனங்களிடத்தில் கர்த்தர் எதிர்பார்க்கக் கூடிய முக்கியமான ஒரு குணம் தாழ்மை. நியாயம் செய்து இரக்கத்தை சிநேகித்து உன் தேவனுக்கு முன்பாக மனத் தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தை கர்த்தர் கேட்கிறார் என்று மீகா தீர்க்கதரிசியின் மூலமாக கர்த்தர் தம்முடைய ஜனங்களோடு பேசுகிறார். மனத்தாழ்மை என்ற நற்குணம் மனிதர்களை ஜீவனுக்கு நேராக வழிநடத்தக் கூடியதாக இருக்கக்கூடிய அதே நேரத்தில் அகந்தை மனிதனை அழிவுக்கு நேராக வழிநடத்தக் கூடியதாக காணப்படுகிறது. 

            எஸ்தரின் புஸ்தகத்திலே ஆமான் என்ற மனிதரை காண முடியும். இந்து தேசம் முதல் எத்தியோபியா தேசம் வரையிலான 127 நாடுகளை ஒரே குடையின் கீழ் ஆளக்கூடிய அகஸ்வேரு ராஜாவுக்கு அடுத்த உயர்ந்த நிலையிலே காணப்பட்ட மனிதர் அவர். 'ஆமான்' யூதர்களை அழிக்க முயற்சித்தவர், மொர்தேகாயின் சத்துரு என்ற ஒரு கோணத்தில் மாத்திரம் நாம் அவரை ஒதுக்கி விட முடியாது. தகுதியின் திறமையும் இல்லாத ஒரு மனிதனை எந்த ஒரு ராஜாவும் இவ்வளவு உயர்வான இடத்தில் நிச்சயமாக வைத்திருக்க மாட்டார்கள்.  உலகப் பிரகாரமாக ஆமானின் திறமைகளை தகுதிகளை நாம் குறை சொல்லிவிட முடியாது. 

            எவ்வளவு சிறந்த படகாக இருந்தாலும் அதில் காணப்படக்கூடிய ஒரு சிறிய துவாரம் அதை மூழ்கடித்து விடும் என்பதை போல சிற்சில சுபாவங்கள் மனிதர்களை அழிக்கக்கூடியதாக இருந்ததை வரலாற்றின் பக்கங்களில் நாம் திரளாக காணமுடியும். மிகப்பெரிய பொறுப்பு வாய்ந்தவர் ஆக இருந்தபடியினாலும் ராஜாவுக்கு அடுத்த நிலையிலே  அதிகாரம் மிக்கவராக இருந்தபடியினாலும் ராஜாவின் ஊழியக்காரர்கள் யாவரும் அவரை நமஸ்கரிக்க கூடியவர்களாக பணிந்து கொள்ளக் கூடியவர்களாக காணப்பட்டார்கள். ஆனால் மொர்தேகாய் அவரை வணங்கவும் இல்லை நமஸ்கரிக்கவும் இல்லை. ஆமானுக்கு அது மிகவும் உறுத்தலாக இருந்தது அதை அவரால் கொஞ்சமும் சகித்துக் கொள்ள முடியவில்லை. சில இடங்களில் உரிய அங்கீகாரங்கள் மரியாதைகள் கிடைக்காததை போல உணரும் போது மனத்தாழ்மை உள்ளவர்களாக அந்த இடத்தை விட்டு கடந்து போவது தேவனுடைய பிள்ளைகளுக்கு அழகு, மேலும் வேதம் சொல்லுகிறது தன்னை தாழ்த்துகிறவன் எவனும் உயர்த்தப்படுவான். 

            மொர்தகாய்க்கு மட்டும் தீங்கு செய்வது ஆமானுக்கு மிகவும் எளிய காரியமாக காணப்பட்ட படியினாலே மொர்தகாயின்.  இனத்தாராகிய யூதர்கள் அனைவரையும் அழித்து விட வேண்டும் என்ற கொடிய எண்ணத்தோடு ஆமான் காய் நகர்த்தத் தொடங்கினார். தன்னுடைய உலக பிரகாரமான செல்வாக்கை மட்டுமே நம்பி அவர் இதில் இறங்கினார். யூதர்கள் யார்? அவர்களது பின்னணி என்ன? தேவனுக்கும் அவர்களுக்குமான தொடர்பு எப்படிப்பட்டது? ஏன் அவர்கள் இந்த அகஸ்வேருவின் தேசத்தில் இருக்கிறார்கள் என்பதெல்லாம் ஆமானுக்கு தெரியாது. கர்த்தர் தன்னுடைய பிள்ளைகளை சிட்சித்தாலும் அவர்கள் மீது மிகவும் கரிசனையுள்ளவராக காணப்படக்கூடிய தேவன். எல்லா யூதர்களும் தங்கள் ஜீவனை காப்பாற்றிக் கொள்ளும்படிக்கு உபவாசம் இருந்து கர்த்தரை நோக்கி கூப்பிட தொடங்கினார்கள். காரியம் மாறுதலாக  முடியத் துவங்கியது. 

            மிகப்பெரிய ராஜாவுக்கே உதவி செய்யக் கூடியவராக இருந்தபோதிலும் தன்னுடைய அகந்தையின் மிகுதியினாலே சாதாரண ஒரு மனிதனுக்கு எதிராக தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆமான் அழிவுக்கு நேராக கடந்து சென்றார். அவருடைய அகந்தை அவரை அழித்து போடக்கூடியதாக காணப்பட்டது. கூடுமானால் உங்களால் ஆன மட்டும் எல்லாம் மனுசரோடும் சமாதானமாய் இருங்கள். எப்படிப்பட்ட மனிதர்களாக இருந்தாலும் ஒடுக்கப்படுகிறவர்களுக்கு கர்த்தர் ஆதரவாக நிற்கிறவர் ஆகவே தாழ்மையுள்ளவர்களாக காணப்படுங்கள். கர்த்தருடைய கரம் உங்களுக்கு அனுகூலமாய் இருக்கும்.

No comments:

Post a Comment

உங்களுக்கு எதிரானவர்கள் சத்தியத்துக்கு எதிரானவர்கள்.!

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்...